கடலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடாம்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் பாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிதிஷ் பாலா(14), ஹரி பிரசாத்(11) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற அன்று அண்ணன் தம்பி இருவரும் பள்ளி முடிந்து சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது பின்னால் வேகமாக வந்த வேன் சைக்கிள் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த ஹரி பிரசாத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ஹரி பிரசாத் பரிதாபமாக உயிரிழந்தான். லேசான காயத்துடன் உயிர் தப்பிய நித்திஷ் பாலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.