லெஜண்ட் சரவணா ஸ்டோரின் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் தயாரித்து, நடித்த படம் “தி  லெஜண்ட். இதில் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுத்தாலா நடித்திருந்தார். மிகப் பிரமாண்டமான பொருட் செலவில் உருவாகிய இத்திரைப்படத்தில் மறைந்த நடிகர்கள் விவேக் மற்றும் மயில்சாமி நடித்திருந்தனர். மேலும் விஜயகுமார், சச்சு, லதா, நாசர், பிரபு, ரோபோ சங்கர், யோகி பாபு, பேபி மானஸ்வி கொட்டாச்சி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இப்படம் தமிழ் தெலுங்கு உட்பட 5 மொழிகளில் கடந்த வருடம் ஜூலை 28-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து லெஜண்ட் சரவணன் தன் அடுத்த திரைப்படம் பற்றி எந்த ஒரு தகவலும் வெளியிடாத நிலையில், காஷ்மீரில் உள்ள நட்சத்திர தங்கும் விடுதியில் இருந்து காணொலி ஒன்றை தன் டுவிட்டர் பக்கத்தில் கடந்த 21-ம் தேதி வெளியிட்டிருந்தார். அதில், காஷ்மீரில் லெஜண்ட் என அவர் பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் லெஜண்ட் சரவணன் கூறியிருப்பதாவது “உங்கள் காத்திருப்புக்கான நேரம் நெருங்கியுள்ளது. சுவாரசியமான அப்டேட்டுகள் இன்னும் சில நாட்களில் வெளியாகும்” என பனிப்படர்ந்த காஷ்மீரில் இருக்கும் புகைப்படங்களுடன் அவர் டுவிட் செய்துள்ளார். இந்த புகைப்படங்களானது தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஒருவேளை காஷ்மீரில் உள்ள லியோ படபிடிப்பில் லெஜண்ட் சரவணன் இணைந்துள்ளாரோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.