துருக்கி நாட்டை சேர்ந்தவர்கள் செமி மற்றும் அவரது மனைவி மெர்வி. இவர்கள்  இந்தியாவுக்கு 3 மாத சுற்றுலா விசாவில் வந்த நிலையில், கடந்த சில நாளுக்கு முன்  திருவண்ணாமலைக்கு வந்தனர். இந்நிலையில் நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்தபோது, தரிசனம் செய்துவிட்டு கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உள்ள கொடிமரத்தின் முன் சிவன் பாடலுக்கு மெர்வி நடனம் ஆடியுள்ளார். இதனையடுத்து மிகுந்த பக்தி பரவசத்துடன் மெர்வி நடனம் ஆடியதை, அவரது கணவர் வீடியோ எடுத்துள்ளார்.

மேலும் மெர்வி நடனமாடிய போது கோவில் சார்பில் மலர்மாலை வழங்கப்பட்டது. இந்த மாலையை கழுத்தில் அணிந்தபடி மற்றும் பக்தி பரவசத்தில் தூக்கி வீசியபடி மெர்வி மெய் மறந்து நடனமாடியதை  கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். மேலும் அந்த பெண்ணுடன் ஆன்மிக பக்தர்கள் பலர் செல்பி எடுத்தனர். இந்நிகழ்வு அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.