கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து காவல் உதவி ஆய்வாளர் உள்பட 6 பேரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தனிப் படை காவல்துறையினர் 320 பேரிடம் விசாரணை நடத்தி 1500 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையின் நகல்களை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலும் புலனாய்வு அதிகாரிகளிடமும் ஒப்படைத்து உள்ளனர்.

இந்நிலையில் கோடநாடு வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையில் 700-க்கும் அதிகமான தொலைபேசி உரையாடல்கள் வைத்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கோடநாடு சம்பவம் நடந்தபோது நீலகிரி மாவட்ட எஸ்பியாக முரளி ரம்பா இருந்து உள்ளார். இதனால் அவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கோடநாடு வழக்கு பற்றி ஆவணங்களை மலையாள மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்தது தொடர்பாக மணிகண்டனுக்கும் சாட்சிகளின் அடிப்படையில் விசாரணைக்காக கர்சன் செல்வம் மற்றும் ஜெயசீலன் ஆகிய 3 பேரையும் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் ஆஜராக சிபிசிஐடி காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

அந்த வகையில் 3 பேரும் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்திலுள்ள அலுவலகத்தில் ஆஜராகினர். அதன்பின் 3 பேரிடமும் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இன்று ஒவ்வொருவரிடமும் சுமார் 3 மணிநேரம் விசாரணை நடைபெற்று உள்ளது. இவ்விசாரணையில் வழக்கு குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.