இன்றைய அவசர உலகில் எத்தனையோ வீடியோக்களை நாம் பார்த்தாலும், ரத்த பந்தங்களின் பாசத்தைப் பறைசாற்றும் வீடியோக்கள் எப்போதும் தனி ரகம். அப்படி ஒரு வீடியோதான் இப்போது இணையத்தை நனைய வைத்துள்ளது.

நீண்ட நாட்களாக வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்த இளைஞர் ஒருவர், தனது பாட்டிக்குத் தெரியாமல் திடீரென ஊருக்கு வந்துள்ளார். வயல்வெளியில் தனியாக உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த பாட்டிக்கு முன்னால், அவர் சத்தமில்லாமல் சென்று அமர்ந்தார்.

தன்னை அறியாமல் முன்னே அமர்ந்திருப்பது தனது பேரன் என்று தெரிந்ததும், அந்தப் பாட்டியின் முகத்தில் மின்னிய மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

“இவ்வளவு வயதாகியும் ஏன் வேலை செய்கிறீர்கள்?” என்று பேரன் செல்லமாகக் கேட்க, அதற்குப் பாட்டியோ “சும்மா உட்கார்ந்து என்ன பண்றது.. அதான் வேலை பார்க்கிறேன்” என்று எதார்த்தமாகப் பதிலளித்து பேரனைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். ‘சூரஜ்’ என்ற எக்ஸ் பயனர் பதிவிட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து நெகிழ்ந்து போயுள்ளனர்.