கர்நாடக மாநிலத்தில் உள்ள தார்வாட் ஹூப்ளி என்ற மாநகரில் (இன்று) 12-ஆம் தேதி  முதல் 16-ஆம் தேதி வரை தேசிய இளைஞர் தினமானது நடைபெற்று வருகிறது.  இவ்விழாவில் இளைஞர்களின் ஆளுமை, தேசிய ஒருமைப்பாடு மற்றும் மாநிலத்தின் கலாச்சாரம் ஆகியவை இடம் பெறுகிறது. இந்நிலையில் விழாவில் கலந்து கொள்ள இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலிருந்தும் 1000 நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்பதற்காக தேர்வாகியுள்ளனர். அந்தவகையில் 150 மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களிலிருந்து தேர்வாகியுள்ளனர்.

அவர்களில் 10 மாணவர்கள் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளிலிருந்து தேர்வாகியுள்ளனர். அதில் ஒருவரான ரமேஷ் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் பொருளாதாரம் பிரிவில் மூன்றாம் ஆண்டு மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 பிரிவில் படித்து வருகிறார். இவரை கல்லூரியின் முதல்வர், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வழியனுப்பி வைத்துள்ளனர். மேலும் இவர் திருப்பூர் மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே அரசு கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.