
ஜெய்ப்பூரிலிருந்து மும்பைக்குச் செல்லும் இண்டிகோ விமானத்தை தவறவிட்டதால், பிராண்டிங் ஆலோசகர் சாயன் கார்க் என்பவர் ரூ.2.65 லட்சம் இழந்ததாக புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அவர் LinkedIn இல் ஒரு வைரல் பதிவை பகிர்ந்துள்ளார். அதில், விமான நிலையத்தில் எந்த அறிவிப்பும் இல்லை என்றும், விமான நிறுவனம் தன்னிடம் எந்த அனுதாபமும் காட்டவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமான நிலையத்தில் “அமைதியான விமான நிலையம்” என்ற நடைமுறை இருப்பது காரணமாக, முக்கியமான தகவல்களை பயணிகள் கேட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாயன் கார்க் அதிகாலை 4:40 மணிக்கு ஜெய்ப்பூர் விமான நிலையத்தை அடைந்தார். 5:10க்கு பாதுகாப்பு சோதனையை முடித்த அவர், விமான ஏறுதல் விரைவில் தொடங்கும் என்று சொல்லப்பட்டதால், கூட்டம் இருந்ததனால் சிறிது நேரம் கழிப்பறைக்குச் சென்றார்.
ஆனால் 12 நிமிடங்களுக்கு பிறகு திரும்பிய போது விமான ஏறுதல் நிறைவடைந்துவிட்டது. அதிர்ச்சியடைந்த அவர் ஊழியர்களிடம் கேட்ட போது, ‘ஜெய்ப்பூர் ஒரு அமைதியான விமான நிலையம்’ என்பதே பதிலாக இருந்தது. அதே நேரத்தில் மற்றொரு விமானமான டெஹ்ராடூன் விமானத்துக்கான அறிவிப்பை கேட்டதாகவும் அவர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக வைரலானது. சாயன் கார்க், “இது விமானம் தவறியதைக் குறித்து மட்டுமல்ல. இது மனிதநேயத்தைப் பற்றிய ஒரு கேள்வி” என கூறினார். அவரது இழப்பை இண்டிகோ விமான நிறுவனம் திருப்பி கொடுக்காததோடு, மாற்று ஏற்பாடுகளும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பல பயணிகள் இந்த பதிவுக்கு பதிலளித்து தங்களது அனுபவங்களையும் பகிர்ந்துள்ளனர். ஒரு பயனர், “நுகர்வோர் மன்றத்தில் புகார் கொடுக்கலாம்” என்று பரிந்துரைத்துள்ளதுடன், மற்றொருவர் “விமான நிறுவனங்கள் பயணிகளை மரியாதையுடன் நடத்த வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.