புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மலைக்குடிப்பட்டி கிராமத்தில் சுப்பிரமணி (45) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாயார் பழனியம்மாள் (75). சுப்பிரமணிக்கு திருமணமாகி கனகு என்ற மனைவி இருக்கிறார். கனகு சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பழனியம்மாள் தன்னுடைய மருமகளிடம் சூடாக டீ வேண்டும் என்று கேட்டுள்ளார். அதன்படி கனகு மாமியாருக்கு டீ கொண்டு சென்ற போது டீ ஆறிபோய் இருந்ததால் பழனியம்மாள் அவரை திட்டியுள்ளார்.

இதனால் பழனியம்மாள் மற்றும் கனகு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் தகராறு முற்றியதில் அருகே இருந்த இரும்பு கம்பியை எடுத்து கனகு தன்னுடைய மாமியாரை தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பழனியம்மாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கனகுவை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.