கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரம் பகுதியில் வசிப்பவர் செந்தில்குமார் (52). பின்னல்வாடி அரசு பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரிடம் சேர்ந்தநாடு என்ற கிராமத்தை சேர்ந்த ஆபிரகாம் பிரகாஷ் என்பவர் சீட்டு போட்டுள்ளார். இந்நிலையில் ஏலச்சீட்டு முடிந்தும் ஆபிரகாம் பிரகாசுக்கு கொடுக்க வேண்டிய ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை கொடுக்காமல் செந்தில்குமார் மோசடி செய்து வந்ததாக தெரிகிறது.

மேலும் இது குறித்து ஆபிரகாம் பிரகாஷ் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜிடம் புகார் மனு கொடுத்துள்ளார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் செந்தில்குமார் அந்த பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட  மக்களிடம் ஏலச்சீட்டின் மூலம் ரூ.50 லட்சத்திற்கும் மேல் பண  மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து செந்தில்குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.