கடலூர் மாவட்டத்தில் உள்ள கே.என் பேட்டையில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சக்தி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். கடந்த 7 நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. இதனால் மன உளைச்சலில் இருந்த சக்தி நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் மது போதையில் வீட்டின் சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்தை உடைத்தார்.

அதன் பிறகு அதிலிருந்த உடைந்த கண்ணாடியை எடுத்து தனது கையிலும், கழுத்திலும் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோரும், உறவினர்களும் சக்தியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சக்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.