கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள டி.நல்லிகவுண்டன் பாளையத்தில் அருண் சக்கரவர்த்தி(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 6 மாதங்களாக அருண் சக்கரவர்த்தியும் வடக்கி பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். கடந்த 1-ஆம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே இரண்டு பேரும் காணாமல் போனதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து அறிந்த காதலர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து இளம்பெண் அருண் சக்கரவர்த்தியுடன் அனுப்பி வைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து பெண்ணிடம் உறவினர்கள் சிலர் பேசியதாக தெரிகிறது. அதன் பிறகு திருமணம் முடிந்த இரண்டாவது நாளில் இளம்பெண் தாலியை கழற்றி அருணிடம் கொடுத்துவிட்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.

இதனால் மன உளைச்சலில் அருண் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அருண் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.