காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி குறித்து அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அவர்கள் கும்பகோணத்தில் சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ் அழகிரி, மாநிலத் துணைத் தலைவர் ராஜேந்திரன், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன், கும்பகோணம் மாநகர தலைவர் மிர்சாவூன், தியாகராஜன் உட்பட 5 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை ரயில்வே நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.