சென்னை மாவட்டத்தில் உள்ள சென்னீர்குப்பம் ஜெ.ஜெ நகரில் புவியரசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சக்தி சரவணன் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்ட சக்தி சரவணன் கடந்த எட்டாம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். காய்ச்சல், தொண்டை வலி, டைபாய்டு, மஞ்சள் காமாலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சக்தி சரவணன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் முகாம்கள் அமைத்து வேறு யாருக்காவது காய்ச்சல் இருக்கிறதா என டாக்டர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். சென்னீர்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார வசதிகள் எதுவும் செய்து கொடுக்காமல் குப்பைகள், சாக்கடைகள் இருந்ததால் கொசுக்கள் உற்பத்தியாகி சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டு இறந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.