தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பவனமங்கலம் மெயின் ரோடு பகுதியில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்பியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஓவியா என்ற மகளும், கவிபாலன் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் கவி பாலன் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளான். தினமும் அக்காள் தம்பி இருவரும் வீட்டில் இருந்து வேன் மூலம் பள்ளிக்கு சென்று வருகின்றனர். நேற்று பள்ளி முடிந்து இருவரும் வேனில் வந்தனர்.

இந்நிலையில் வேனில் இருந்து இறங்கி கவி பாலன் வீட்டை நோக்கி நடந்து சென்ற போது மணல் ஏற்றி வந்த லாரி கவி பாலன் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது. இந்த விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி கவிபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் லாரி கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். இதுகுறித்து அறிந்த பெற்றோர் தங்களது மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.