கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குமாரனங்கணப்பள்ளி கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் தங்கி பேக்கரியில் ஸ்வீட் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 1/2 வயதுடைய ரித்திகா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சசிகலா கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றார். இதனால் தனது மகளை தனது தாயிடம் விட்டு சென்றார். இந்நிலையில் புடவையால் தொட்டில் கட்டி ரித்திகாவை அவரது பாட்டி தூங்க வைத்தார்.

இதனையடுத்து கண்விழித்து தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்தபோது சேலை கழுத்தை இறுக்கி ரித்திகா மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ரித்திகாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்து டாக்டர் ரித்திகா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.