புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மருங்கிப்பட்டியில் அரசு ஆரம்பப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் தேர்தல் நடைபெறும். இந்த ஆண்டு ஜூன் மாதம் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் 14 மாணவர்கள் வேட்பாளர்களாக களமிறங்க, வாக்காளர் பட்டியலும் தயார் செய்யப்பட்டது. இதனையடுத்து வேட்பாளர்களின் புகைப்படம் அடங்கிய வாக்குச் சீட்டு தயாரிக்கப்பட்டு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றது.

இதில் பள்ளி தலைமை ஆசிரியர் நாகலட்சுமி தேர்தல் அதிகாரியாகவும், பள்ளி மேலாண்மை குழு தலைவர் முத்துமணி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கருப்பையா, பழனியாண்டி ஆகியோர் தேர்தல் அலுவலர்களாகவும் செயல்பட்டனர். இந்நிலையில் ஜனநாயக முறைப்படி வேட்பாளருக்கு மாணவர்கள் வாக்குகளை செலுத்தி கடமையை நிறைவேற்றிய பிறகு வெற்றி பெற்ற மாணவர்கள் மந்திரிகளாக பதவி ஏற்று கொண்டனர்.

அதன்படி உள்துறை மந்திரிகளாக பிரவீன், தர்வீந்தனா, வெளியுறவுதுறை மந்திரிகளாக சூரிய பிரகாஷ், தாரணி மதிய உணவுத்துறை மந்திரியாக விக்னேஸ்வரன், மற்றும் மந்திரிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆசிரியர்களுடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.தேர்தல் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்த ஆசிரியர் திருப்பதி கூறியதாவது, இளம் வயதிலேயே மாணவர்களிடம் அரசியல் பற்றிய ஆர்வத்தையும், தலைமை ஏற்கும் பண்புகளையும் வளர்க்க வேண்டியது நமது கடமையாகும்.

நாட்டின் எதிர்காலம் இந்த குழந்தைகளின் கைகளில் தான் இருக்கிறது என்பதால் மாணவர்களுக்கு நல்லவற்றை சொல்லித் தர வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு அதிகமாக உள்ளது. அதனை மாணவர்கள் உணர வேண்டும் என்பதற்காக தேர்தலை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.