ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மோசூர் கிராமத்தில் பேருந்து டிரைவரான தங்கமலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினகரன்(17) என்ற மகன் இருக்கிறார். இவர் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று ஆரணியில் இருந்து ஆற்காடு நோக்கி வரும் அரசு பேருந்தில் தினகரன் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளார்.

இந்நிலையில் உப்புபேட்டை அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக தினகரன் கீழே விழுந்தார். அவர் மீது பேருந்தின் சக்கரம் ஏறியதால் கால் கட்டைவிரல் நசுங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தினகரனை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.