தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ஆம் தேதி காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது போலீசார் தாக்கியதில் இருவரும் பரிதாபமாக உயரிழந்தனர். இவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 9 பேர் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு மதுரை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் 2 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நேற்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் கைது செய்யப்பட்ட 9 காவலர்களும் நேரில் ஆஜராகினர். அதன் பிறகு உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை உடற்கூறாய்வு செய்த மருத்துவர் செல்வமுருகன் நேரில் ஆஜரானார். அவர் தந்தை-மகன் இறந்ததற்கு காரணம் கொடூர காயங்களே என்று கூறினார். மேலும் இதனையடுத்து அடுத்த கட்ட விசாரணையை 28-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.