கேரளா சபரிமலைக்கு புனித யாத்திரை சென்ற தமிழகத்தை சேர்ந்த நபர் திடீரென்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர் பெயர் மேகநாதன் (45) எனவும் ஈரோடு பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்து உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பம்பை பகுதியில் வழக்கத்திற்கு மாறாக நடந்துகொண்ட மேகநாதன் அப்பகுதியில் இருந்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி தகவலறிந்து வந்த காவல்துறையினர் மேகநாதனை அழைத்து காவலர் பேருந்தில் ஏற்றி இருக்கின்றனர். சிறிது நேரத்தில் பேருந்தை விட்டு வெளியேறிய மேகநாதன், அங்கிருந்த காவலர்கள் உள்ளிட்டோரிடம் தற்கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

மேகநாதனை காப்பாற்ற தீயணைப்புத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். எனினும்  அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எதற்காக மேகநாதன் தற்கொலை செய்து கொண்டார் என்பது தொடர்பாக எந்த தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை. இதனிடையே தற்கொலை செய்த மேகநாதனின் சடலத்தை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.