வீட்டிலிருந்து வேலை செய்யும் ‘வொர்க் ப்ரம் ஹோம்’ (Work From Home) கலாச்சாரம் தற்போது நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. ஆன்லைன் மீட்டிங்குகள் சர்வ சாதாரணமாக நடந்து வரும் நிலையில், எதிர்பாராமல் நடக்கும் சில சுவாரசியமான சம்பவங்கள் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வைரலாகி விடுகின்றன. அந்த வகையில், நேரலை மீட்டிங் ஒன்றில் பெண் ஊழியர் ஒருவர் முகத்தில் ஃபேஸ் பேக் போட்டுக் கொண்டு கலந்துகொண்டதும், அதற்கு அவர் கொடுத்த கலகலப்பான பதிலும் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமான ஒரு நாள் அலுவலக ஆன்லைன் மீட்டிங் அது. மேலாளர் தனது அணியினருடன் இணைந்து முக்கியமான திட்டங்கள் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தார். அப்போது, மீட்டிங்கில் கலந்துகொண்டிருந்த பெண் ஊழியர் ஒருவரிடம், மேலாளர் தனது கேமராவை ஆன் செய்யுமாறு தொடர்ந்து வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார். “தயவுசெய்து உங்கள் கேமராவை ஆன் செய்யுங்கள், அப்போதுதான் என்னால் திட்டங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள முடியும்” என்று அவர் விடாமல் கூறினார்.

தொடக்கத்தில் தயங்கிய அந்தப் பெண் ஊழியர், மேலாளரின் தொடர் அழுத்தத்தினால் வேறு வழியின்றி தனது கேமராவை ஆன் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கேமரா ஆன் ஆனவுடன், திரையில் தெரிந்த காட்சியைப் பார்த்து மேலாளர் ஒரு நிமிடம் அதிர்ந்துபோய் உறைந்துபோனார். ஆம், அந்த ஊழியர் தனது முகம் முழுக்க வெள்ளை நிறத்தில் ஃபேஸ் பேக் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தார்.

 

இதைப் பார்த்த கோபம் கொள்ளாமல் இருக்க முடியாத மேலாளர், உடனடியாக ஆட்சேபம் தெரிவித்து, “இத்தகைய வேலைகளை எல்லாம் உங்களது லஞ்ச் டைமில்  வைத்துக்கொள்ளுங்கள்” என்றார். ஆனால், இன்றைய Gen Z தலைமுறையைச் சேர்ந்த அந்தப் பெண் ஊழியர் கொஞ்சமும் பதறாமல், மிகவும் கூலாக ஒரு பதிலைக் கூறினார். “நீங்கள் லஞ்ச் பிரேக்கே வெறும் 15 நிமிடங்கள்தானே தருகிறீர்கள்; ஆனால், நான் போட்டிருக்கும் இந்த ஃபேஸ் பேக் காய்வதற்கு சரியாக 20 நிமிடங்கள் ஆகுமே!” என்று பதிலளித்தார். அதோடு நிறுத்தாமல், மிகவும் அப்பாவித்தனமாக, “இப்போது நான் என் கேமராவை ஆஃப் செய்து கொள்ளலாமா சார்?” என்றும் கேட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

X பக்கத்தில் பகிரப்பட்ட இந்த சுவாரசியமான வீடியோ கிளிப், தற்போது இலட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து நெட்டிசன்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்து விவாதித்து வருகின்றனர். ஒரு தரப்பினர் ஊழியருக்கு ஆதரவாக, “ரிமோட் முறையில் வேலை செய்யும் ஊழியர்கள் முகமூடி போட்டுக் கொண்டால் என்ன, வேலை சரியாக நடந்தால் அதுபோதும். மேலாளர்களுக்கு ஏன் எப்போதும் கேமராவைப் பார்க்க வேண்டும் என்ற மோகம்?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மற்றொரு தரப்போ, அலுவலக மீட்டிங்குகளில் கடைபிடிக்கப்பட வேண்டிய அடிப்படை ஒழுக்கங்கள் குறித்தும், இது போன்ற வீடியோக்கள் வெறும் வியூஸ்களுக்காகத் திட்டமிட்டுப் படமாக்கப்பட்டிருக்கலாமோ என்றும் விவாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.