சென்னை மாவட்டத்தில் உள்ள பாடியநல்லூர் பாலகணேசன் நகர் நான்காவது தெருவில் அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சுகன்யா கர்ப்பிணியாக உள்ளார். முதல் 5 மாதங்கள் சுகன்யா மாதவரம் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து வந்தார். இந்நிலையில் சென்னை தி.நகரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் பிரசவத்தின் போது பெண்ணின் கணவர் உடனிருந்து பிரசவத்தை பார்த்துக் கொள்ளலாம் என விளம்பரம் செய்திருப்பதாக தெரிகிறது.

இதனால் அஜித் சுகன்யாவை அந்த மருத்துவமனையில் அனுமதித்தார். கடந்த 4 மாதமாக அங்கு பரிசோதனைகள் செய்யப்பட்டது. கடந்த 16-ஆம் தேதி சுகன்யாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்த்தனர். சில ஊசிகள் போட்ட பிறகு சுகன்யாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மயக்கம் அடைந்த நிலையில் சுகன்யாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்ததாக தெரிகிறது. அதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

ஆனால் சுகன்யா சுயநினைவு இன்றி இருந்ததால் வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்க்கும் படி உறவினர்கள் கூறியுள்ளனர். இதனால் மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் சென்னை எழும்பூரில் இருக்கும் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுகன்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று சிகிச்சை பலனின்றி சுகன்யா பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு பிறந்த ஆண் குழந்தை இன்குபேட்டர் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுகன்யாவின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். திடீரென அஜித் அந்த வழியாக சென்ற லாரியின் முன்பு பாய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தவறான சிகிச்சை அளித்ததால் தான் தனது மனைவி உயிரிழந்ததாகவும் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அஜித் புகார் கொடுத்துள்ளார்.