ஈரோடு மாவட்டத்தில் உள்ள தோப்புபாளையத்தில் விவசாயியான தங்கராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரியங்கா(31), கார்த்திகா(27) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். கார்த்திகாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. இந்நிலையில் பிரியங்காவுக்கு உடல்நலம் சரியில்லாததால் திருமணம் ஆகவில்லை.

கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இதய கோளாறு காரணமாக தங்கராசுவுக்கு பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டதால் அவருக்கும் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டது. நேற்று மதியம் தங்கமணி ஆடு மேய்ப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது குளியல் அறையில் தங்கராசுவும், பிரியங்காவும் சடலமாக தொங்குவதைக் கண்டு கதறி அழுதார்.

இதுபற்றி அறிந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் தங்கராசுவும், பிரியங்காவும் எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் எங்கள் இருவருக்கும் உடல் நலம் சரியில்லை. எனவே தற்கொலை செய்து கொள்கிறோம். வேறு எந்த காரணமும் இல்லை என எழுதி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.