திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கரட்டுப்பட்டி பகுதியில் விவசாயியான பொன்னுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நல்லம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பொன்னுசாமியும், நல்லம்மாளும் வேடசந்தூரில் இருக்கும் தங்களது மூத்த மகள் பொன்னுதாயை பார்ப்பதற்காக ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் வேடசந்தூர் அய்யனார் நகர் பிரிவில் பொன்னுசாமி ஸ்கூட்டரை திருப்பினார்.

அப்போது பின்னால் 40 பயணிகளுடன் வந்த அரசு பேருந்து ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் லாரி முன்பக்க சக்கரத்தில் ஸ்கூட்டர் சிக்கியதால் நல்லம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த பொன்னுச்சாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பொன்னுசாமியும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.