தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி கிராமத்தில் விவசாயியான தங்கமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கிருத்திகா தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 29-ஆம் தேதி கல்லூரியில் இருந்து கிருத்திகா பேருந்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தனது தம்பியிடம் செல்போனில் பேசிய கிருத்திகா தனக்கு உடல்நலம் சரியில்லை என கூறியுள்ளார். இதனையடுத்து சோர்வடைந்த நிலையில் வீட்டிற்கு வந்து கிருத்திகா வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கிருத்திகாவை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருத்திகா வேலூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கிருத்திகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கிருத்திகா விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.