கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புல்லாணிவிளை பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹோட்டலில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2  குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியும் குழந்தைகளும் பிரிந்து சென்றதால் ராஜேஷ் தனது தாய் தங்கத்துடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி ராஜேஷ் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். கடந்த 4 மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட தங்கம் தனது மகள் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

நேற்று முன்தினம் ராஜேஷின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் தங்கத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனால் தங்கம் வீட்டிற்கு வந்து கதவை திறந்து பார்த்தபோது சோபாவில் தனது மகன் அழுகிய நிலையில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.