கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளம்பெண் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு கோவை அறிவொளி நகரை சேர்ந்த 22 வயது ஆட்டோ டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 5 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இந்நிலையில் ஆட்டோ டிரைவர் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் கடந்த 6 மாதங்களாக மாணவி அவருடன் பேசுவதையும், பழகுவதையும் நிறுத்திவிட்டார்.

சம்பவம் நடைபெற்ற அன்று கல்லூரி மாணவி ஹோட்டல் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற ஆட்டோ டிரைவர் மாணவியின் கையை பிடித்து இழுத்து தகராறு செய்தார். மேலும் மாணவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து மாணவி ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஆட்டோ டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.