கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாப்பநாயக்கன் பாளையத்தில் ராமு என்பவர் தனது வீட்டிற்கு அருகில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரி மாணவர் ஒருவர் ஜெராக்ஸ் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தனது கடைக்கு வந்த ஒரு இளம்பெண்ணை ராமு செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்ததை பார்த்த கல்லூரி மாணவர் ராமுவை கண்டித்தார். மேலும் அவரது செல்போனை வாங்கி பார்த்த போது ஏராளமான கல்லூரி மாணவிகள் இளம்பெண்களின் வீடியோ, புகைப்படம் இருந்ததை கண்டு மாணவர் அதிர்ச்சியடைந்தார். மேலும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆபாச வீடியோக்களும் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கல்லூரி மாணவர் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ராமு காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் எனது கடைக்கு வந்த 2 பேர் கல்லூரி மாணவிகளின் வீடியோக்கள் எனது செல்போனில் இருப்பதாக கூறி சோதனை செய்ய வேண்டும் என கேட்டனர். நான் செல்போனை கொடுக்க மறுத்து தெரிவித்ததால் அவர்கள் என்னை கீழே தள்ளி செல்போனை பறித்தனர். இதனால் எனக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.