தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாங்கரை கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிடம் மேஸ்திரியான தமிழன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தமிழனுக்கும் மோனிஷா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மோனிஷா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.

இந்நிலையில் தமிழன் தனது மாமியாரின் வீட்டிற்கு சென்று மனைவியிடம் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு மோனிஷா மறுப்பு தெரிவித்ததால் மன உளைச்சலில் இருந்த தமிழன் ஏரிக்கரையில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.