கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஓம் சக்தி கோவில் வீதியில் அனிதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்துவிட்டார். இதே போல ஆட்டோ டிரைவரான சின்னதுரை என்பவரது மனைவியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இந்நிலையில் சின்ன துரைக்கும் அனிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து அனிதாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இது சின்ன துரைக்கு பிடிக்கவில்லை. மேலும் அனிதா சின்னதுரைக்கும் அவரது முதல் மனைவிக்கும் பிறந்த மகள், மகனிடம் பாசம் காட்டாமல் வெறுப்பாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

சம்பவம் நடைபெற்ற அன்று அனிதா தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அனிதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தனது தாயின் சாவில் சந்தேகம் இருப்பதாக அனிதாவின் மகன் கார்த்திக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் அனிதாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்தது. இதனால் போலீசார் சின்னதுரையை கைது செய்து விசாரணை நடத்தியதில், தனது முதல் மனைவியின் குழந்தைகளிடம் பாசமாக நடந்து கொள்ளவில்லை. மேலும் குடிபோதையில் தகராறு செய்ததால் அனிதாவை கொலை செய்து போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக அவரை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.