தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சிறுமி செங்கோட்டைக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு செல்போன் கடையில் தனது செல்போனை பழுது பார்ப்பதற்காக கொடுத்துவிட்டு அங்கேயே நின்று கொண்டிருந்தார். அப்போது சிறுமிக்கு தெரிந்த மூன்று வாலிபர்கள் ஆட்டோவில் வந்தனர். இந்நிலையில் சிறுமி தனியாக நிற்பதை பார்த்து ஆட்டோவில் தங்களுடன் வருமாறும், வீட்டில் இறக்கி விடுவதாகவும் தெரிவித்தனர். இதனை நம்பி சிறுமி ஆட்டோவில் ஏறியுள்ளார். சிறிது தூரம் சென்றதும் மூன்று பேரும் சிறுமியின் வாயில் துணியை வைத்து அழுத்தி காட்டு பகுதிக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.

மறுநாள் காலை அதே ஆட்டோவில் சிறுமியை ஏற்றி தென்காசி ஊருக்குள் கொண்டு வந்து விட்டு 3 பேரும் தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் தென்காசியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மாதவன், அவரது நண்பர்களான வெங்கடேஷ், அந்தோணி என்பது தெரியவந்தது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் மாதவன் மற்றும் அந்தோணியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான வெங்கடேஷை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.