ஈரோடு மாவட்டத்திலுள்ள நரிப்பள்ளம் பகுதியில் குமரேசன் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சிக்கு தயார் செய்து அனுப்பும் பணி நடைபெறுகிறது. நேற்று மதியம் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு இருந்த இடத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1/2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஆலையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் கழிவுகள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.