தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைகிறது. இந்நிலையில் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சாம்ராஜ் என்பவரது விவசாய கிணற்றில் துர்நாற்றம் வீசியது. இதனால் சாம்ராஜ் கிண்ணத்திற்குள் எட்டிப் பார்த்தபோது, காட்டுப்பன்றி குட்டிகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று 6 காட்டு பன்றிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு உணவு தேடி வந்த போது 6 குட்டிகளும் கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து காட்டு பன்றிகளின் உடலை வனத்துறையினர் குழி தோண்டி புதைத்தனர்.