ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது கிராமத்திற்குள் நுழைந்து கால்நடைகளை வேட்டையாடுகிறது. இந்நிலையில் ராமபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஒரு ஆடு காணாமல் போனது.

இதனால் நாகராஜ் ஆட்டை தேடி பார்த்தார். அப்போது பட்டியில் இருந்து சிறிது தூரத்தில் கடித்து குதறப்பட்ட நிலையில் ஆட்டின் உடல் கிடந்ததை கண்டு நாகராஜ் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது சிறுத்தை புலிதான் ஆட்டை கடித்து கொன்றது தெரியவந்தது. இதனால் சிறுத்தை புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.