வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 3-வது நாளாக நேற்று 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. இதனையடுத்து மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசும் மற்றும் கடல் சீற்றமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை விடுத்தது. இதனால் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, தங்கச்சிமடம் போன்ற பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. எனவே 2-வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல்  1500-க்கும் மேற்பட்ட படகுகள் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்நிலையில் பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து செல்வதற்காக மராட்டிய மாநிலம் பெலத்தூர் துறைமுகத்தில் இருந்து ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினம் செல்வதற்காக வந்த மிதவை கப்பல் கடந்த 4 நாட்களாக நிறுத்தி வைக்கபட்டது. பாம்பன் குருசடை தீவு அருகே உள்ள கடல் பகுதியில் பாதுகாப்புடன் இந்த மிதவை கப்பல் நிறுத்தபட்டுள்ளது. இவ்வாறு  தூக்குப்பாலத்தை கடந்து நாகப்பட்டினம் செல்வதற்காகவும் 10-க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளும் உள்ளன. இவையனைத்தும் பாம்பன் தென்கடல் பகுதியில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புயல் சின்னம் ஓய்ந்த பிறகு இந்த வாரத்தில் இந்த மிதவை கப்பலானது துறைமுக அதிகாரிகள் அனுமதியுடன் பாம்பன் தூக்குப்பாலம் வழியாக கடந்து செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.