உத்தரப் பிரதேசம் மாநிலம், லக்னோவின் பந்த்ரா பகுதியில் சனிக்கிழமை மாலை, ஒரு சாதாரணமான ஓவர்டேக் தகராறு திடீரென பயங்கரமான சாலை விபத்தாக மாறியுள்ளது. ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் ஒருவர், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் ஒரு பெண் ஆசிரியர் உட்பட மூன்று பேர் மீது தனது காரை ஏற்றிவிட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டோவை தவறான முறையில் ஓவர்டேக் செய்ததால் ஆட்டோ ஓட்டுநருக்கும் கார் ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், விரைவில் கைகலப்பாக மாறியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நடந்தபோது, ​​சண்டையைத் தடுக்கச் சாலை ஓரத்தில் நின்றிருந்த பலரையும் கார் ஓட்டுநர் அடாவடித்தனமாகத் தாக்கியுள்ளார். இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சண்டை முற்றியதால், அங்கிருந்த மக்கள் பலரும் விஷயத்தில் தலையிட வந்தனர். அப்போது, ஆத்திரத்தில் இருந்த கார் ஓட்டுநர் தனது வாகனத்தில் ஏறி, அங்கிருந்து தப்பிச் செல்வதற்குப் பதிலாக, கூட்டத்தை நோக்கி வேகமாகச் சென்று அவர்களைக் காரால் மோதியுள்ளார். மக்கள் விலகி ஓடியபோதும் அவர் காரை நிறுத்தாமல் அவர்களைக் நசுக்கிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் ஆத்திரத்தில் செங்கல் மற்றும் கற்களை அவர் மீது வீசியெறிந்துள்ளனர்.

பின்னர், அந்த நபர் காரைப் பின்னோக்கியும் செலுத்தி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஒரு குறிப்பிட்ட தூரம் சென்ற பிறகு, உள்ளூர் மக்களால் சூழப்பட்ட அந்த நார், காரை அங்கேயே விட்டுவிட்டு ஓடித் தப்பிச் சென்றார். கார் மோதியதில் காயமடைந்த மூன்று பேரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, முதலுதவிக்கு பின் வீடு திரும்பினர். ஆசிரியரின் புகாரின் அடிப்படையில், பந்த்ரா போலீஸ் வழக்குப் பதிவு செய்து, கார் ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகிறது.