தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மணியம்பாடி கிராமத்தில் செந்தில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்ரீ நிகேஷ், கவின் நிலவன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 27-ஆம் தேதி பள்ளி முடிந்து மாலை நேரம் வீட்டிற்கு வந்தபோது இருசக்கர வாகனம் மோதி செந்தில்குமார் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

நேற்று முன்தினம் செந்தில்குமார் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து விஜயலட்சுமி தனது கணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக தெரிவித்தார். இதனால் மருத்துவ குழுவினர் செந்தில்குமாரின் உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து வேலூர், சேலம், சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.