தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த பல பேர் தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். ஆகவே இதற்கு தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதித்து தமிழக சட்டசபையில் கடந்த வருடம் அக்டோபர் 19-ஆம் தேதி அனைத்து கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது.

அதன்பின் இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக கடந்த வருடம் அக்டோபர் 28ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. பல தினங்களாக கிடப்பில் போடப்பட்ட அந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென்று தமிழக அரசுக்கு திருப்பியனுப்பினார். ஆளுநரின்  இந்த நடவடிக்கைக்கு பல தரப்பினரும் தங்களது கண்டனத்தினை தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு எதிரான தடைச்சட்ட மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றும் முழு உரிமை அரசுக்கு உள்ளதாக அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். இந்த தடைச் சட்டம் மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு 4 மாதங்களுக்கு பிறகு திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் சட்ட முன் வடிவு மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்புவோம். அடுத்தடுத்து நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என ரகுபதி உறுதியளித்துள்ளார்.