மத்தியப்பிரதேச மாநிலம், சிவ்புரி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் பிரபலமான யூடியூபர் ரச்னா குர்ஜார் என்பவரின் வீட்டில் சமீபத்தில் நடந்த கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது ஆடம்பரமான வாழ்க்கை முறை மற்றும் தங்க நகைகளைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் காட்சிப்படுத்தி வந்த ரச்னாவின் வீட்டில், வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் புகுந்துள்ளனர்.

மேலும் வீட்டின் வேலி கம்பிகளை வெட்டி உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், குடும்பத்தினர் உறங்கிக் கொண்டிருந்தபோது அவர்களின் அறையை வெளியில் இருந்து பூட்டிவிட்டு, சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் தங்க, வெள்ளி ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளனர்.

“>

இந்தத் துணிகரச் செயலின் போது, சிசிடிவி கேமராக்களைக் கொள்ளையர்கள் திசை திருப்பியது, அவர்கள் வீட்டை நன்கு கண்காணித்த பின்னரே இந்தத் திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகிறது. மேலும், கொள்ளையர்கள் செல்வதற்கு முன்பு வீட்டில் இருந்த எனர்ஜி டிரிங்க் பெட்டிகளையும் எடுத்துச் சென்றது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அதிகாலை 4 மணியளவில் ரச்னா தூக்கத்தில் இருந்து எழுந்தபோது அறை பூட்டப்பட்டிருப்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தார். தற்போது நர்வர் காவல் நிலைய காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.