திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, வடசேரி ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரபல பெயிண்ட் நிறுவனத்தின் பெயரில் போலியான பெயிண்டுகள் விற்பனை செய்யப்படுவதாக வாடிக்கையாளர்கள் அதன் தலைமை அலுவலகமான டெல்லிக்கு புகார்கள் அனுப்பியுள்ளனர். அதன் அடிப்படையில் டெல்லியில் இருந்து வந்த சிறப்பு குழுவினர் பெருமாள்பேட்டை கூட்ரோடு, ஆலங்காயம், வடசேரி ஆகிய இடங்களில் இருக்கும் 3 கடைகளில் வாடிக்கையாளர்கள் போல சென்று பெயிண்ட் டின்களை விலைக்கு வாங்கி சோதனை செய்துள்ளனர்.

அப்போது அவை முற்றிலுமாக போலியாக தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இதுகுறித்து பெயிண்ட் நிறுவன பொது மேலாளர் சுந்தரம் வாணியம்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கடைகளுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டு 50க்கும் மேற்பட்ட போலி பெயிண்ட் டப்பாக்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சக்கரவர்த்தி என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.