ஈரான் – இஸ்ரேல் போர் 9-வது நாளை எட்டியுள்ள நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக அமெரிக்காவுக்கு மிகப்பெரிய நெருக்கடி உருவாகியுள்ளது.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் கத்தார் உள்ளிட்ட முக்கிய வளைகுடா நாடுகள், அமெரிக்காவில் மேற்கொள்ளவிருந்த பல பில்லியன் டாலர் முதலீடுகளை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளன.

போர் காரணமாகத் தங்களால் கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவுவதைக் காரணம் காட்டி (Force Majeure), ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தங்களில் இருந்து தற்காலிகமாக விலக இந்த நாடுகள் ஆலோசித்து வருகின்றன.

ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ளதால் கச்சா எண்ணெய் வருவாய் குறைந்துள்ளதும், பாதுகாப்புச் செலவுகள் அதிகரித்துள்ளதும் வளைகுடா நாடுகளை இந்த அதிரடி முடிவை எடுக்கத் தூண்டியுள்ளது.

கடந்த ஆண்டு டிரம்ப் வளைகுடா நாடுகளுக்கு வந்தபோது நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் முதலீடுகளுக்குப் பச்சைக்கொடி காட்டப்பட்டது.

இப்போது அந்த முதலீடுகள் கைநழுவிப் போவது டிரம்பிற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. “எந்த அடிப்படையில் இந்தத் தாக்குதலை நடத்தினீர்கள்?” எனத் துபாய் தொழிலதிபர்கள் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பத் தொடங்கியிருப்பது அமெரிக்காவுக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.