இறைச்சி சாப்பிட்டு மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பெருந்துறை காஞ்சி கோவில் கண்ணவேலம் பாளையத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவருக்கும்  மூலகவுண்டன்பாளையத்தை சேர்ந்த  ஜானகி என்பவருக்கும்  கடந்த 23-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் விருந்திற்காக ஜானகியின் வீட்டிற்கு கடந்த 24-ஆம் தேதி சென்றுள்ளனர். அங்கு பிரகாஷ் ஆட்டு இறைச்சி சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து இருவரும் வீடு திரும்பியுள்ளனர். பின்னர் அன்று இரவு பிரகாஷ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென ஒவ்வாமையால் அவருக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டு அலறி துடித்துள்ளார். உடனடியாக உறவினர்கள் பிரகாஷை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் கொண்டு செல்லும் வழியிலேயே பிரகாஷ் உயிரிழந்துள்ளார். திருமணம் முடிந்த மறுநாளே இறைச்சி சாப்பிட்டு மணமகன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.