திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புலிவலம் பகுதியில் ஞானசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அபிநயா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 7 வயதில் மகனும், 4 வயதில் மகளும் இருக்கின்றனர். இதில் ஞானசுந்தரம் உதவி அர்ச்சகராக இருக்கிறார். நேற்று முன்தினம் திருவாரூர் தெற்கு வீதியில் இருக்கும் காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

இந்நிலையில் அபிஷேகம் நடத்திய அர்ச்சகருக்கு உதவியாக இருந்த ஞானசுந்தரம் மந்திரம் சொல்வதற்காக மைக்கை எடுத்தார். அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு ஞானசுந்தரம் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஞானசுந்தரம் பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.