சிலிக்கான் சிட்டியான பெங்களூருவில் பெண்களுக்குப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் வசிக்கும் இளம் பெண் ஒருவர், இரவு நேரத்தில் சாலையில் நடந்து சென்றபோது ஒரு கார் அவரைப் பின்தொடர்ந்துள்ளது. அந்த காரில் இருந்த நபர் ஆடைகள் ஏதுமின்றி நிர்வாணமாக அமர்ந்துகொண்டு, பெண்ணைப் பார்த்து ஆபாசமாகச் சைகை காட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தனது செல்போனில் அந்த காரை வீடியோ எடுத்தபடியே ஓடியுள்ளார்.

“யாராவது உதவுங்கள்… நான் உதவி கேட்டு அலறுகிறேன், ஆனால் யாரும் என் குரலைக் கேட்கவில்லை”  என அந்தப் பெண் கதறும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைத்துள்ளது.

“பெங்களூரு போன்ற பெரிய நகரத்திலேயே ஒரு பெண்ணுக்கு இந்த நிலைமையா?” என நெட்டிசன்கள் கர்நாடக காவல்துறையை நோக்கிக் காரசாரமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.