உத்தரபிரதேசத்தின் வாரணாசி நகரிலுள்ள ஒரு ஓட்டலில் பிரபல போஜ்புரி பட நடிகையான ஆகான்க்சா துபே (25) என்பவர் தூக்கு போட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டார். இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது மரணத்தில் மர்மம் இருக்கிறது என சொல்லப்படுகிறது.

இதனிடையே நடிகர் மற்றும் பாடகரான சமர்சிங் என்பவருடன் காதலில் இருந்த ஆகான்க்சா, காதலர் தினத்தில் இன்ஸ்டாகிராமில் தங்களது காதலை உறுதிப்படுத்தியிருந்தனர். இந்நிலையில் ஆகான்க்சா துபேவின் தாயார் மது கூறியதாவது, சமருடன் ஆகான்க்சா 3 வருடங்களாக பணிபுரிந்துள்ளார். எனினும் ஒரு பைசா கூட கொடுத்தது இல்லை.

அதன்படி சமர் கொடுக்கவேண்டிய பணம் ரூ.3 கோடி இருக்கும். ஒவ்வொரு முறையும் ஆகான்க்சா பணம் கேட்கும் போது, சமர் அவளை அடித்து சித்ரவதை செய்து துன்புறுத்தி வந்துள்ளார். ஆகவே ஆகான்க்சா துபே மரணத்தில் சிபிஐ விசாரணை தேவை என்று அவர் கோரிக்கை விடுத்து உள்ளார். அதன்பின் வாரணாசி காவல்துறையினர் மதுவின் புகாரின்படி சமர்சிங் மற்றும் அவரது சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.