சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கத்தில் கேசவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை மாநகராட்சி அண்ணா நகர் மண்டலம் 105-வது வார்டில் சுகாதார ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை கேசவன் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியில் இருக்கும் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது தர்மர் என்பவர் கடையில் கிலோ கணக்கில் இருந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து கேசவன் 2000 ரூபாய் அபராதம் விதித்தார்.

இதனால் கோபமடைந்த தர்மரும் அவரது குடும்பத்தினரும் கேசவனிடம் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக கேசவன் அணிந்திருந்த அடையாள அட்டையில் கத்தி குத்தியதால் லேசான காயங்களுடன் அவர் உயிர் தப்பினார். இதனால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கேசவன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தர்மரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.