கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முள்ளுவிலை பகுதியில் பத்மகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பது, மூவாற்றுமுகத்தில் இருக்கும் சீட்டு நிறுவனத்தை ஸ்ரீகுமார் என்பவரது மனைவி வசந்தி, அவரது மகன் பரத்குமார் ஆகியோர் நடத்தி வந்துள்ளனர். கடந்த 2017-ஆம் ஆண்டு 4 லட்ச ரூபாய் சீட்டில் சேர்ந்த போது 40 மாதங்கள் வரை பணம் செலுத்த வேண்டும் என கூறினர். இதுவரை நான் 2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளேன்.

இதனையடுத்து 30-ஆவது தவணை செலுத்திய பிறகு 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை ஏலம் எடுத்தேன். தற்போது வரை பணத்தை அவர்கள் கொடுக்காமல் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சீட்டு நிறுவனத்தில் 100 பேருக்கு 2 கோடி ரூபாய் வரை பணம் கொடுக்காமல் மோசடி செய்தது தெரியவந்தது. அவர்கள் மீது 10 பேர் வரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி வசந்தி, அவரது மகன் பரத் குமாரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.