குஜராத் மோர்பி நகரிலுள்ள மச்சு ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷ் காலக்கட்டத்தில் கட்டப்பட்ட தொங்கு பாலமானது அஜந்தா நிறுவனத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது. இப்பாலம் கடந்த ஆண்டு அக்டோபர் 30ம் தேதி எதிர்பாராத வகையில் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 135 நபர்கள் உயிரிழந்த நிலையில், 56 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்த வழக்கை குஜராத் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது.

இதற்கிடையில் அஜந்தா மேனுஃபேக்ச்சரிங் லிமிடெட் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக தெரிவித்து இருந்தது. இந்நிலையில் மோர்பி பாலம் விபத்தில் பலியாகிய 135 பேரின் குடும்பத்தினருக்கு இடைக்கால நிவாரணமாக தலா ரூபாய்.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்க குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.