உத்திரபிரதேசத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை அம் மாநில நிதி அமைச்சர் சுரேஷ்குமார் கண்ணா தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் மொத்த மதிப்பு 6,90,242.43 கோடி ரூபாய் ஆகும். இந்த பட்ஜெட்டில் பல்வேறு விதமான அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார். அதன்படி மாணவர்களுக்கு சுவாமி விவேகானந்தா இளைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இலவச ஸ்மார்ட் போன் மற்றும் லேப் லட்டுகள் போன்றவற்றை வழங்குவதற்கு 3600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

அதன் பிறகு ஐடி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க 60 கோடி ரூபாயும், 4 வேளாண் பல்கலைக்கழகங்களில் வேளாண் ஸ்டார்ட் அப் திட்டங்களுக்கு 20 கோடி ரூபாயும், ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 465 கோடி ரூபாயும், வாரணாசி மற்றும் கோரக்பூர் போன்ற நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு 100 கோடி ரூபாயும், தேசிய ஊரக சுகாதார திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு விதமான திட்டங்களுக்கு 12,631 கோடி ரூபாயும், முதியோர் மற்றும் விவசாயிகள் பென்ஷன் திட்டத்திற்கு 7248 கோடி ரூபாயும், மாற்று திறனாளிகள் பென்ஷன் திட்டத்திற்கு 1120 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அரசு மருந்துகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அமைக்க 20 கோடி ரூபாயும், காவல்துறையினரின் வீட்டு வசதி மேம்பாட்டிற்காக 1000 கோடி ரூபாயும், யூனிட்டி மால் அமைக்க 200 கோடி ரூபாயும், ஓபிசி பிரிவை சேர்ந்த ஏழை எளிய பெண்களுக்கு திருமண உதவித்தொகைக்காக 150 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த பெண்களுக்கு திருமண உதவித்தொகைக்காக 600 கோடி ரூபாயும், முதல்வர் கன்யா சுமங்கலா திட்டத்தின் கீழ் பெண்களுக்காக 1050 கோடி ரூபாயும், ஆதரவில்லாத விதவைப் பெண்களுக்காக 4032 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.