மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டியில் வசிக்கும் வீரபாண்டி என்பவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த வாரம் சேலத்தை சேர்ந்த ஒருவர் வீரபாண்டியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனது பெயர் சதீஷ் என அறிமுகப்படுத்தி கொண்டார். இதனையடுத்து தான் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், 15 லட்ச ரூபாய் கடன் தருவதாகவும் தெரிவித்தார். மேலும் முன் வைப்பு தொகையாக 2 லட்ச ரூபாய் கொடுத்தால் 15 லட்சம் ரூபாய் கடன் தொகை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதனை நம்பி வீரபாண்டி 2 லட்ச ரூபாய் பணத்துடன் சேலத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு சென்று வீரபாண்டி சதீஷ், அவரது நண்பர் விஷ்ணு ஆகியோரை சந்தித்துள்ளார். அப்போது சதீஷ் பணத்தை பெற்று கொண்டு மாவட்ட கருவூலத்தில் செலுத்தி ஒப்பந்த பத்திரம் வாங்கி வருவதாக கூறி சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் தான ஏமாற்றப்பட்டதை அறிந்த வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சதீஷ், விஷ்ணு ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.