காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்த நிலையில் 24 மணி நேரத்தில் அவரை நாடாளுமன்ற மக்களவை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் கனிமொழி எம்பி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போன்றவரும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

கனிமொழி எம்பி நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் குரலை ஒடுக்குவதற்கான செயலை பாஜக அரசு செய்து வருகிறது எனவும், ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததற்கு ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்று சேரும் எனவும் கூறியுள்ளார். இதேபோன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றத்தில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது அப்பட்டமான ஜனநாயக படுகொலையாகும்.

மோடிகள் ஊழல் செய்தார்கள் என்று ராகுல் காந்தி ஆதாரத்தோடு பேசியதற்கு பிரதமர் மோடியை தான் பேசினார் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போலியான நாடகம் நடத்தி 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்தது நீதியை குழி தோண்டி புதைத்த செயலாகும். ‌ இதைக் காரணம் காட்டி நாடாளுமன்ற மக்களவையில் இருந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது மிருகத்தனமான செயல். ஆணவத்தின் உச்சியில் பாஜக இருக்கிறது. ஜெர்மனியில் ஹிட்லரின் நாசிச ஆட்சி, இத்தாலியில் முசோலினியின் பாசிச ஆட்சி, உகண்டாவில் இடி அமீன் நடத்திய கொடுங்கோல் ஆட்சியைப் போன்று நரேந்திர மோடி அரசு செயல்படுகிறது.‌ மேலும் இதற்கெல்லாம் சேர்த்து நாட்டு மக்கள் நரேந்திர மோடி அரசுக்கு தண்டனை கொடுப்பார்கள் என்று பதிவிட்டுள்ளார்.